புதுடில்லி : அரபி கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரிப்பதன் காரணமாக, லட்சத்தீவில் இரு விமான தளங்களை கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தென் சீன கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், சீனாவின் சவாலை சமாளிக்கும் வகையில்,
யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் மினிகாய் தீவில் புதிய விமான தளமும், அகாட்டி தீவில் தற்போது இருக்கும் விமான தளத்தை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விமான தளங்கள், ராணுவ தேவை மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, போர் விமானங்கள், ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்கள் மற்றும ராணுவ ட்ரோன்கள் ஆகிய அனைத்திற்கும் பயன்படும் வகையிலும் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த விமான தளங்களின் முழு கட்டுப்பாடும், இந்திய விமானப்படையிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அரபி கடல் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கவும், லட்சத்தீவில் சுற்றுலாவை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments