சென்னை: ''2026ல் முதல்வர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமரப் போகிறார்'' என்று, மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.
அண்ணாமலை பேசிய வீடியோ காண https://youtu.be/F8Q2VHVc1Fk
சென்னையில் நடந்த மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:
மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழக மண்ணில், இந்திய மண்ணில் கொடுப்பதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும். 2026ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
சாமானிய மனிதர்களில் இருந்து குறிப்பாக டீ கடையிலிருந்து ரோட்டில் எங்கு போனாலும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதல்வர் இபிஎஸ் இந்த மேடையில் இப்பொழுதுதான் பேசிவிட்டு போய் இருக்கிறார்கள்.
2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம், 2026ல் மாற்றம் வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம் அரசு விடிவெள்ளியாக செயல்பட வேண்டும்.
ஜி.கே.மூப்பனார் மேலே இருந்து நம்மளை பார்த்து கொண்டு இருப்பார்கள். நிச்சயமாக அவரது ஆசை 2026ம் ஆண்டு தேர்தலில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது:
மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது இந்திய அளவில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர். தேசிய தலைவராக விளங்கியவர். அவர் எளிமையானவர். அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர்.
கட்சி பேதம் இல்லாமல் யார் அழைத்தாலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ வைக்க கூடிய பண்பாளர். 1996ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி திறம்பட வழி நடத்தினார். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
நிகழ்ச்சியில் வருகை தந்துள்ள தலைவர்களை வரவேற்று பேசிய இபிஎஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சகோதரர் என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments