ADS

ஊட்டியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து முடக்கம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி, கூடலூர் பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், முதுமலை, நடுவட்டம் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல இடங்களில், மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, இரவு முதல் பெய்து வரும் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் குச்சிமுச்சி ஆற்றில், ஏற்பட்ட வெள்ளத்தில், போஸ்பாரா சாலையில் உள்ள பாலம் முழ்கியது. இதனால், குச்சிகுச்சி - மண்வயல், போஸ்பாரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி குந்தா அணை திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதுமலை மாயாறு ஆற்றில், ஏற்பட்ட மழை வெள்ளத்தில், தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியதால், தொப்பக்காடு - மசினகுடி இடையே, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ஓட்டுநர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, தவளைமலை அருகே, மரம் விழுந்ததால் தமிழகம், கர்நாடகா, கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுந்த மரங்களை மீட்பு படையினர் இயந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர்.

Post a Comment

0 Comments