விமானியாக முன்னாள் மத்திய அமைச்சர்.
என்னை அடையாளம் தெரியவில்லையா? என விமான பயணத்தில் தயாநிதி மாறனுக்கு ஆச்சர்யம் அளித்த பாஜகவின் மூத்த எம்.பி..
இதுதொடர்பாக தயாநிதி மாறன் பகிர்ந்த நெகிழ்ச்சியான தகவல்," இன்று நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது "நீங்களும் இதே விமானத்தில்தான் வருகிறீர்களா?" என்று விமானி உடையிலிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார்அவர் முக கவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாக தெரிந்தது.
நானும் தலையசைத்தபடி யார் அவர் என யோசித்தேன். அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முககவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது. "ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை" என்றார் வியப்போடு. பிறகுதான் தெரிந்தது, அவர் என்னுடைய சகாவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் ஒன்றிய வர்த்தக அமைச்சராக பணி யாற்றிய போது அதே துறையின் இணையமைச்சராக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான திரு.ராஜீவ் பிரதாப்ரூடி என!
இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரிடம் மகிழ்ச்சியுடன் "நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி "ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானி" என்றார். எனது இனிய நண்பரும் சகாவும் ஒரு விமானியாக இருப்பதைக் கண்டுபெருமைப்பட்டேன்.
உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா! நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக புது டில்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தமைக்கு நன்றிகள் கோடி விமானி திரு ராஜீவ் பிரதாப்ரூடிஎம்.பி.அவர்களே" என்று அவர் தெரிவித்துள்ளார் என ஒரு நாளிதழ் பதிவு செய்துள்ளது.
ஆனால் கடைசிவரை அவர் பாஜகவின் மூத்த தலைவர் என்றோ, பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் என்றோ தயாநிதி மாறன் தெரிவிக்கவில்லை. காரணம்..? நல்ல மனிதரை பாஜககாரர் என்று வெளிபடுத்துவது குற்றம் என்று அவர் மனசாட்சி சொல்லியிருக்குமோ..?
இவ்வளவு நெகிழ்ச்சியாக அவரைப பற்றி கூறியவர், கடைசிவரை அவர் எந்த கட்சி எம்.பி.என்று கூறவில்லை.இதை பதிவு செய்த' News 18 தமிழ்' நாளிதழும் கடைசிவரை எந்த கட்சி எம்.பி.என பதிவு செய்யாமல் தன் பத்திரிக்கை தர்மத்தை காப்பாற்றியுள்ளது.
0 Comments