கோவை: தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, 'நான் தலைவர் அல்ல, சேவகன்' என பேசியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவராக, 16ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்கிறார். அதற்காக, இன்று (ஜூலை 14) கோவையில் இருந்து, சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டார். கோவையில் அண்ணாமலைக்கு, அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் மேற்கொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பா.ஜ.,வில் இருந்து பல பேருக்கு அகில இந்திய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருபக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சிக்குள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள்.
பா.ஜ.,வை பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. இது தனிமனித கட்சி கிடையாது. நான் தமிழக பா.ஜ., கட்சியின் தலைவர் அல்ல, சேவகன். மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு வீடாகவும் கொண்டு செல்வோம். கிராமங்களை நோக்கி எங்களின் திட்டங்களை எடுத்து செல்வோம்.
கோவை மண், நாட்டுக்காக பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. இந்த மண் மிகவும் புனிதமான மண், இந்த இடத்தில் இருந்து என் பயணம் தொடர்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., வரும். 2024 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் அதிகபட்ச தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments